வார்டு சீரமைப்பு பணி நடப்பதால் தேர்தல் நடத்த முடியாது... அவகாசம் கோரியது தேர்தல் ஆணையம்!
வார்டுகள் மறுசீரமைப்பு பணி நடப்பதால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது.
மதுரை : வார்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இப்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் அவகாசம் கோரியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை 15 நாட்களில் அறிவிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மாநிலத் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் வார்டுகளை மறுவரையறை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடைபெற்றால் பிரச்னைகள் ஏற்படும். வார்டு மறுவரை முடியாததால் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது. வார்டு வரையறைக்காக 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் 19 ஆயிரம் மனுதாரர்களின் வார்டு மறுவரையறையை சரிசெய்வதில் பிரச்னை நிலவுகிறது.
வார்டு சீரமைப்பு பணி முடிய 2 மாதத்திற்கு மேல் ஆகலாம், அது வரை தேர்தல் நடத்த முடியாது என்று நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் வார்டு வரையறை பிரச்னையை காரணம் காட்டி தேர்தல் தேதி அறிவிப்பை ஒத்திவைத்துக் கொண்டே போவதை ஏற்க முடியாது என்றனர்.
மேலும் வார்டு வரையறைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணையானது 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications