வேலையை விட தேசம் தான் முக்கியம்.. அரசுப் பணியைத் துறந்த ஆசிரியை சபரிமாலா அதிரடி!
அரசுப் பணியை விட தேசம் தான் முக்கியம் என்று முழக்கத்துடன் ஒரே கல்வி முறையை வலியுறுத்தி போராட்டக் களத்தில் இறங்கிய சபரிமாலா, தனது ஆசிரியர் பணியை தூக்கி எறிந்துள்ளார்.
Recommended Video

விழுப்புரம் : இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்வடுத்த வலியுறுத்தி போராடி வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா பணியை விட தேசம் தான் முக்கியம் என்று தனது பணியைத் துறந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே பல பட்டிமன்றங்களில் நடுவராகவும் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு கொண்டும் ஆசிரிய பணிக்கு முன் உதாரணமாக விளங்கி கொண்டு இருக்கிறார் சபரிமாலா ஜெயகாந்தன். இன்றைய நீட் தேர்வு தேவையில்லை என்ற முழக்கத்தோடு தமிழகத்திலேயே முதல் அரசுப் பள்ளி ஆசிரியராக தனது 7 வயது மகனுடன் போராட்டத்தை தொடங்கினார் சபரிமாலா. இன்று அவர் தனது ஆசிரியர் பணியையும் தூக்கி எறிந்துள்ளார்.
இதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்று பார்க்கலாம்: வைராபுரம் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் ஏழ்மையான அரசுப் பள்ளியின் ஆசிரியர் நான். அனிதாவின் மரணம் ஒரு கல்வி எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளியில் மகன் படிப்பு
என்னுடைய மகனை நான் அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறேன் போதிய வசதிகள் இருந்தும் சமூக நீதிக்காகவும், சமூக மறுமலர்ச்சிக்காகவுமே நான் என் மகனை அரசுப் பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மகன் நாளை மருத்துவராக வேண்டும், மிகப்பெரிய அதிகாரியாக வேண்டுமெனில் நீட் மட்டுமல்ல இன்னும் பிற தேர்வுகளை எழுத வேண்டும்.

சமூக கோபம்
ஆனால் அதற்கு இந்தப் பாடத்திட்டத்தில் எழுதினால் வெற்றி கிடையாது என்கிற நிலை தான் உள்ளது. இதை நினைக்கும் போது என்னுடைய மகனுக்கு நான் நியாயம் செய்கிறேனா இல்லையா என்ற குறைந்தபட்ச சுயநலத்துடனே என்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்காக என் மகனுடன் தன்னந்தனியாக போராட்டத்தில் இறங்கியுள்ளேன்.
|
யாரும் வேண்டாம்
அனிதா சொல்வது போல என் பிள்ளைக்காக இல்லாவிட்டாலும் நான் கல்வி கற்பிக்கும் எத்தனையோ ஏழை மாணவர்களின் நலனுக்காகவே நான் பாடுபடுகிறேன். எனக்கு இந்த ஊர் மக்களோ, இளைஞர்களோ, நான் கல்வி கற்றுத் தரும் மக்களோ துணை நிற்க வேண்டாம். எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கும் சமூக அக்கறை, தேசத்தின் மீது இருக்கும் சமூக கோபம் இது.
ஒரே கல்விமுறை
நீட் தேர்வல்ல இன்னும் எத்தனை கடினமான கேள்விகளை வேண்டுமானாலும் கேளுங்கள், ஆனால் ஒரே கல்வி முறையை கொடுத்துவிட்டு இதனை செய்யுங்கள், அப்படி செய்திருந்தால் அனிதா நிச்சயம் வெற்றி பெற்றிருப்பாள். இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறையை கொடுத்துவிட்டு எத்தனை பெரிய தேர்வுகள் வேண்டுமானாலும் நடத்துங்கள் என்றார் சபரிமாலா.












Click it and Unblock the Notifications