குடும்ப அரசியலை பார்த்துக் கொண்டு துக்ளக் சும்மா இருக்காது - ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு
தமிழகத்தில் இன்னொரு கட்சியும் குடும்ப அரசியலுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை: துக்ளக் இதழில் 47ஆவது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஆசிரியர் சோ. ராமசாமியின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தும் விழாவாகவே இது அமைந்தது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
இதில் துக்ளக் இதழில் புதிய ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசினார். அப்போது அவர் இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியல் திசை தவறி தறி கெட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

துக்ளக்கில் என்ன எழுத வேண்டும் என்பதை ஒரு குழுவாகவே முடிவு செய்கிறோம். தனி குரு மூர்த்தியின் சிந்தனை மட்டுமல்ல. இது குழுவின் முடிவு. அவரவர் ஒரிஜினாலிட்டியை பயன்படுத்துகிறோம் என்றும் கூறினார்.
சோ அவர்கள் குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப அரசியலுக்குள் போய்க் கொண்டிருந்தது. இன்றைக்கு இன்னொரு கட்சியும் குடும்ப அரசியலுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறினார்.
இதைப் பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது என்று தெரிவித்த குருமூர்த்தி, எனக்கு ஏன் வம்பு என்று என்னிடம் வந்து சிலர் பேசுகின்றனர். அவர்களிடம் எல்லோரும் பயப்படுவதினால்தான் நான் எழுதுகிறேன் என்றார்.
பத்திரிகை உலகில் ஒருவித பயம் தெரிகிறது. எதிர்த்து பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. நம் நாட்டின் ஆன்மீக குணத்திற்கு நல்லதல்ல எந்த விதமான நல்ல குணத்திற்கும் நல்லதல்ல. இதற்கெல்லாம் மாற்று மருந்து இன்றைக்கு இருக்கிற துக்ளக்தான் என்றும் கூறி அமர்ந்தார் குருமூர்த்தி.
தை பொங்கல் நாளில் துக்ளக் ஆண்டுவிழாவில் சோ பேச்சில்தான் நக்கல், நையாண்டி, அரசியல் கலந்து அனல் பறக்கும். அவரது மறைவிற்குப் பிறகு நடக்கும் முதல் விழாவில் குருமூர்த்தி பேசியது பரபரப்பை பற்ற வைத்து விட்டது என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications