ஊர் ஊராக சுற்றி, விதைப்பந்தால் காடு வளர்க்கும் இளைஞர்கள் : வீடியோ
தமிழ்நாடு இளைஞர்கள் திட்டம் என்னும் அமைப்பினர் விதைப்பந்து தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மரம் வளர்த்து வருகின்றனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு இளைஞர்கள் திட்டம் என்னும் அமைப்பினர் விதைப்பந்து மூலம் மரம் வளர்க்கும் திட்டத்தை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத அளவு வறட்சி நிலவி வருகிறது. அதனால் மனிதர்களும் கால்நடைகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
பருவநிலை மாற்றம் மரங்களின் எண்ணிக்கை குறைவது உள்ளிட்ட பல காரணங்களால் மழை பொய்த்துவிடுகிறது என்னும் நிலையில் தமிழ்நாடு இளைஞர்கள் திட்டம் என்னும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஊர் ஊராக சென்று விதைப் பந்துகளைக் கொடுத்து மரங்களை வளர்க்கச் சொல்லி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அது என்ன விதைப்பந்து என்று கேட்பவர்களுக்காக... 5 பங்கு மண், 3 பங்கு ஆடு, மாடு சாணம் மற்றும் கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களைக் கலந்து மாவு போல் பிசைந்து, அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, அதில் சிறு துளையிட்டு விதைகளை வைக்க வேண்டும். அந்த உருண்டையை நிழலில் காயவைத்து, சிறிது காய்ந்ததும் வெயிலில் காயவைத்தால் விதைப்பந்து ரெடி.
இந்த விதைப் பந்துகள் வறட்சியை ஒரு வருடம் கூட தாங்கும். இதனை மானாவாரி நிலங்களில் வீசியெறிந்துவிட்டால், மழை வரும்போது அந்த விதைகள் முளைத்து அதிக பராமரிப்பு இன்றி மரமாக வளர்ந்துவிடும்.
இதனைத்தான் தமிழ்நாடு இளைஞர்கள் திட்டம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் செய்து வருகின்றனர். புவி வெப்பமயமாதலை தடுக்க நினைக்கும் அனைவரும் இதனை தாங்களாகவே செய்யலாம்.