சின்னஞ்சிறுமியை சிதைத்த கொடூர இளைஞன் – 10 வருடம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி!
தஞ்சை: தஞ்சை அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு பத்து வருட சிறை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உண்ணா மாவட்டத்தில் உள்ள புல்லா கிராமத்தை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் என்ற இளைஞர். இவர் தஞ்சையில் தங்கி இருந்து தள்ளுவண்டியில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில், இவர் தஞ்சை கீழவாசல் பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்த போது, அங்குள்ள ஒரு மளிகைக்கடை அருகே 4 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த சிறுமியை ராம்பிரகாஷ் தூக்கிச்சென்று தஞ்சை டபீர் குளம் சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது சிறுமி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்டு, ராம்பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு ராம்பிரகாஷ் மீது தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி மோகன்தாஸ், குழந்தையை கடத்திச்சென்றது மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.
குழந்தைகள் மீது பாலியல் சம்பவம் நடைபெறுவதை தடுக்கும் விதமாக குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடும் தண்டனை அளித்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும். அதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது இந்த தீர்ப்பு.