‘கிளார்க் வேலை செய்வதற்காக மோடியை பிரதமராக்கவில்லை’.. 7வது நாள் போராட்டத்தில் பெ. மணியரசன் காட்டம்
தஞ்சையில் விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து தஞ்சை விவசாயிகள் போ
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் 7வது நாளாக நடைபெற்று வருகிறது.
காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெ. மணியரசன், இதர விவசாய சங்கள், பெண்கள், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்தல் அமைத்து..
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகிலேயே தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பந்தல் அமைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கூழாங்கள்
விவசாயிகள் கழுத்திலும், இடுப்பிலும் வேப்பிலையை கட்டி கொண்டும் வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் படும் துயரை பிரதமருக்கு தெரிவிக்கும் வகையில் வாயில் கூழாங்கற்களை வைத்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

சேறு பூசி…
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் போன்று, தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் உடல் முழுவதும் சேற்றைப் பூசியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7வது நாள்
விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழக அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனவே, விவசாயிகள் தொடர்ந்து போராட முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் 7வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

‘கிளார்க்’ மோடி
போராட்டக்களத்தில் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசு என்பது மக்களுக்கான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். கொள்கையற்ற முடிவுகளை எடுக்கக் கூடாது. கிளார்க் வேலை செய்வதற்காக மோடியை பிரதமராக்கவில்லை. எடப்பாடி முதல்வராக்கவில்லை. கொள்கை முடிவுகளை உடனுக்குடன் எடுத்து செயல்படுத்த வேண்டும்.

எதிர்வினை
மாநில அரசு 39,565 கோடி வறட்சி நிவாரணம் கேட்டது. 1,728 கோடியைத்தான் மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இதனை ஏன் மாநில அரசு கண்டிக்க வில்லை. கூடுதலாக கொடுங்கள் என்று கூட ஏன் மாநில அரசு கேட்கவில்லை. அப்படியானால் மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் திரைமறைவில் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்தாலும் எதிர்வினையாற்றாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று கடுமையாக மணியரசன் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications