மனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம்.. பெயிண்டருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை: தஞ்சை கோர்ட் அதிரடி
தஞ்சையில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த பெயிண்டருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
தஞ்சை : தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டையில் 2017ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெயிண்டருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் சுப்ரமணியன். இவருக்கு வயது 50. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதன் விளைவாக கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பெயிண்டர் சுப்ரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
மேலும், சுப்ரமணியனை உடனடியாக சிறையில் அடைக்கும்படியும், அவர் சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்றும், அவர் இறந்த பின்னர் பிணமாகத்தான் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.