டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொது மக்கள்
குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையநல்லூர் எம்.எல்.ஏ., அபுபக்கரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செங்கோட்டை: செங்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர் எம்.எல்.ஏ., அபுபக்கரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டடதைத் தொடர்ந்து பிற பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். மூடிய டாஸ்மாக் கடைக்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்து புதிய கடை அமைக்கும் பணி பல இடங்களில் நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் செங்கோட்டை, வல்லம் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கரை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக தெரிவித்தார். இதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பொது மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை, தென்காசி, தென்மலை,பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் மூடப்பட்டன. இந்த நிலையில், செங்கோட்டை - வல்லம் சாலையோரம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு அதிகளவில் கூட்டம் வரத் தொடங்கியது.
இதனால், வல்லம், செங்கோட்டை பகுதி பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சாலை ஓரத்தில் இயங்கும் இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும், புதிய கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications