“புல்” போதையில் கடைக்குள் மட்டையான டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்- நாமக்கல்லில்!
நாமக்கல்: நாமக்கல்லில் குடியரசுதினத்தன்று டாஸ்மாக் கடைக்குள்ளேயே விற்பனையாளர் குடித்துவிட்டு மயங்கி கிடந்த காரணத்தினால் அவரை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து "டாஸ்மாக்" கடைகளும் அடைக்கப்பட்டன. புதன்கிழமை காலை 10 மணிக்கு வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

ஆனால் நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை காலை 10 மணியைக் கடந்தும் திறக்கவில்லை. தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் கடையின் ஷட்டர் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கடையில் வேலை செய்யும் மற்ற ஊழியர்கள் துணையுடன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றனர். அங்கு கடை விற்பனையாளரான ராசிபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் போதை தலைக்கேறிய நிலையில் கிடந்தார்.
மேலும் குடியரசு தினத்துக்கு முதல் நாள் விற்பனை செய்யப்பட்ட தொகையும் உள்ளே அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து மாற்று ஊழியரைக் கொண்டு கடை விற்பனையை தொடர்ந்தனர். கடைக்கு விடுமுறையானாலும் கடையை கவனித்துக் கொள்வதற்காக வந்த ராஜா சரக்கடித்துவிட்டு போதையில் தூங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடை விற்பனையாளர் ராஜாவை டாஸ்மாக் மாவட்ட நிர்வாக மேலாளர் "சஸ்பெண்ட்" செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications