பேன் பார்க்க... தலை பின்னிவிட...மாணவிகளை கட்டாயப் படுத்திய ஆசிரியை- பெற்றோர் கொந்தளிப்பு
கோவை: கோவையில் பேன் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகிலுள்ள அக்கரை செங்கப்பள்ளியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 96 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர், கடந்த மாதம் தங்கள் பெற்றோரிடம், "ஆசிரியை ஒருவர் தங்களை தலையில் பேன் பார்க்கும்படியும், ஜடை பின்னி விடும்படியும் கூறுகிறார். கை, கால்களை அமுக்கி விடும்படி வற்புறுத்துகிறார். செய்யாமல் விட்டால் திட்டுகிறார்" என்று புகார் கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிலர் தலைமை ஆசிரியர் ஜோதியிடம் புகார் தெரிவித்தனர். அதன் பின்பும் குறிப்பிட்ட ஆசிரியையின் நடவடிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை. இதையடுத்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினர்.
இது குறித்து கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி மற்றும் அன்னுார் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீகலா ஆகியோர் இது குறித்து விசாரிக்க நேற்று பள்ளிக்கு வந்தனர்.
அப்போது பள்ளிக்கு வந்த பெற்றோர் அதிகாரிகளிடம் கூறுகையில், "பலமுறை எச்சரித்தும் அந்த ஆசிரியை தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் இங்கு தொடர்ந்து பணிபுரிந்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்" என்றனர்.
அதற்கு பதிலளித்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி, "ஆசிரியை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் கலைந்து செல்லுங்கள்" என்றார். எனினும் பெற்றோர் பள்ளி முன் குவிந்தபடி இருந்தனர். இதையடுத்து, அன்னுார் போலீசார் வந்து, பெற்றோர்களிடம் பேசி அவர்களை கலைந்து போகும்படி கூறி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications