காரைக்குடி பள்ளியில் ஆசிரியர் தினவிழா- ஆசியர்களுக்கு பூரண கும்ப மரியாதை
ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு காரைக்குடி பள்ளியில் ஆசிரியர்களை மலர் தூவியும், ரோஜாப்பூ கொடுத்தும், இனிப்பு கொடுத்தும் வரவேற்று மரியாதை செய்தனர்.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்
இன்று(05.09.2017) ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள இராம.சு. ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் ரொம்பப் பிரபலம். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் படிப்பதில் சாதனை புரிகின்றனர்.
ஆசிரியர் தினம் இன்று பள்ளியில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தலைமையாசிரியர் அவர்களை, மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றார்கள்.
ஆசிரியர்களுக்கு மரியாதை
ஆசிரியர்களை மலர் தூவியும், ரோஜாப்பூ கொடுத்தும், இனிப்பு கொடுத்தும் வரவேற்று மரியாதை செய்தனர்.
மாணவர்கள், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஆசிரியர் தின வாழ்த்து அட்டை வழங்கி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆசிரியர் தின விழா
காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் திரு.நாச்சியப்பன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர் ராஜாஅவர்கள் அனைவரையும் வரவேற்றார். அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் திரு.வில்லியம் துரை ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உற்சாக கொண்டாட்டம்
காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் பயிற்றுனர் திரு. முத்துக்குமார் அவர்கள், காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவர் திரு.சகாய செல்வன் அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி. அழகுசுந்தரி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் கலைநிகழ்ச்சி
காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் திரு. நாச்சியப்பன் அவர்கள், தனது சிறப்புரையில் ஆசிர்யர்களின் மேன்மையான பணி குறித்து பேசினார். மாணவர்கள் ஆடியும், ஆசிரியர்கள் புகழ் பாடியும், ஆசிரியர்களின் சேவையை பற்றி பேசியும், அவர்களைப் போல நடித்தும், நகைச்சுவை நாடகம் நடத்தியும், அனைவரையும் மகிழ்வித்தனர். இவ்விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர். விழாவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு நன்றி
நிகழ்ச்சிகளை பத்தாம் வகுப்பு மாணவர்கள் எம். சபரி மற்றும் பி. மாதேஷ் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் மற்றும் திரு. சரவணன் அவர்கள் செய்திருந்தார்கள்.