ஊட்டி: எஸ்.பியின் மகளை அடித்து துன்புறுத்திய 2 ஆசிரியைகள் கைது
ஊட்டி: எஸ்.பி.,யின் 5 வயது மகளை அடித்து துன்புறுத்தியதாக, தனியார் பள்ளி ஆசிரியைகள் இருவரை ஊட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரின் மகள்; ஊட்டியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், முதல் வகுப்பு படித்து வந்தார்.
'அவரை, பள்ளி ஆசிரியை எஸ்.சுகந்தி, டி.சுகந்தி ஆகியோர், கடந்த இரு மாதமாக 'அடித்து துன்புறுத்தியதாக செய்து வந்தார்' என, மாணவியின் பாட்டி மரகதம்மாள், ஊட்டி ஜி1 போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப் பதிவு செய்து, புகாருக்குள்ளான இரு ஆசிரியைகளை கைது செய்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 'குறிப்பிட்ட இரு ஆசிரியைகள், தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வருகின்றனர் என, எஸ்.பி.,யின் மகள் கூறி வந்துள்ளார்; கடந்த இரு மாதமாக இப்பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், பள்ளியில் இருந்து தனது மகளின் மாற்றுச் சான்றிதழை பெற்ற அவரது பெற்றோர், அந்த ஆசிரியை மீது, புகார் கொடுத்தனர்; அதன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
வாக்குவாதம்
கைது செய்யப்பட்ட ஆசிரியைகளை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி, கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து செல்ல முற்பட்ட போது, பள்ளி ஆசிரியைகள், சில வக்கீல்கள் வாகனத்தை முற்றுகையிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த களேபரத்தில், போலீஸ் ஜீப்பின் முன்புறம் இருந்த 'கிரில்' உடைந்தது.
இரு மாதமாக அடி
இரு மாதங்களுக்கு மேலாக இரு ஆசிரியைகள், சம்பந்தப்பட்ட குழந்தையை 'டார்ச்சர்' கொடுத்ததாக குழந்தையின் பாட்டி மரகதம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு ஆசிரியர்களை கைது செய்தோம்," என்று ஜி1 இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
திடீர் கைது ஏன்?
சம்பவம் பற்றி சக ஆசிரியைகள் கூறுகையில், 'பள்ளிக்கு வந்த போலீசார், விசாரணை என்ற பெயரில், ஆசிரியைகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்; திடீரென அவர்களை கைது செய்து விட்டனர். ஆசிரியைகளுக்கு ஆதரவாக, காவல் நிலையத்திற்கு வந்த வக்கீல்களுக்கு எந்தவொரு தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என்றனர். புகாருக்குள்ளான ஆசிரியைகளிடம் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை' என்றனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியைகள் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications