தினகரன் அணியை குறிவைத்து அடுத்தடுத்து அட்டாக்.. இத்தனைக்கும் காரணம் இவங்கதானாம்!
தினகரன் அணியை திணற திணற டெல்லி போட்டு தாக்கி வருவதற்கு காரணமே ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாதான் என கூறப்படுகிறது.
சென்னை: தங்களது அணியை குறிவைத்து அடுத்தடுத்து டெல்லி நடத்திவரும் தாக்குதல்களுக்கு காரணமே சசிகலா புஷ்பாதான் என குமுறிக் கொண்டிருக்கிறது தினகரன் தரப்பு.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா கோஷ்டியை ஸ்கெட்ச் போட்டு குறிவைத்தது டெல்லி. சேகர் ரெட்டி தொடங்கி ராமமோகன் ராவ் வழியாக விஜயபாஸ்கர் வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது.
இப்போது தினகரனுக்கு குறிவைத்து சிக்க வைத்துவிட்டது டெல்லி. சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள், ராமமோகன் ராவ் தொடர்புகள், விஜயபாஸ்கர் வில்லங்கங்கள், தினகரனின் புரோக்கர் லாபிகள் என அனைத்தையும் துல்லியமாக தாக்கி ஆடுகிறது டெல்லி. இதற்கு யாரெல்லாம் காரணம் என மண்டையை பிய்த்து கொண்டிருக்கிறது தினகரன் கோஷ்டி.
சசிகலா புஷ்பா
டெல்லியுடன் நெருக்கமாக உள்ள மாஃபா பாண்டியராஜனே அனைத்துக்கும் காரணம் என தினகரன் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இருந்தபோதும் மாஃபாவைவிட தினகரன் கோஷ்டியின் ஆதி அந்தங்கள் அனைத்தையும் தெரிந்தவர் சாட்சாத் சசிகலா புஷ்பா எம்.பிதான்.
வரிந்து கட்டி வேலை
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே சசிகலா கோஷ்டிக்கு எதிராக வரிந்து கட்டியவர். ஜெயலலிதா மரணம் தொடங்கி இன்று வரை சசிகலா அணட் கோவை உண்டு இல்லை என ஒரு கை பார்ப்பவரும் சசிகலா புஷ்பாதான்.
போட்டுக் கொடுத்த சசிகலா புஷ்பா
அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் இப்போதுவரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் சசிகலா புஷ்பா. இவர்தான் தமிழக அமைச்சர்களின் வில்லங்கங்கள், தினகரனின் டெல்லி புரோக்கர்கள் குறித்த விவரங்களை டெல்லியிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
டெல்லியில் முகாம்
இதனடிப்படையில்தான் டெல்லியும் அடுத்தடுத்து தினகரன் கோஷ்டியை இலக்கு வைத்து தாக்கி வருகிறதாம். டெல்லியிலேயே முகாமிட்டு சசிகலா புஷ்பா சாதித்து வருவதை எப்படித்தான் எதிர்கொள்வோமோ என விழிபிதுங்கி கிடக்கிறது தினகரன் கோஷ்டி.