தமிழக அமைச்சர்களுக்கு எதிராக ஓபிஎஸ் டீம் மைத்ரேயன் எம்.பி. பகிரங்க போர்க்கொடி
தமிழக அமைச்சர்களை விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மைத்ரேயன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video
சென்னை: தமிழக அமைச்சர்கள் தங்களை புறக்கணிப்பதாக அதிமுக ராஜ்யச்பா எம்.பி.யும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளருமான மைத்ரேயன் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துவிட்டு வந்த பிறகும், அதிகாரத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகப் புலம்புகின்றனர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் சந்திக்க வருவது குறித்து எந்தத் தகவலும் சொல்வதில்லை என வேதனைப்பட்டிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. மைத்ரேயன்.
ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்டு தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் கோரிக்கைகளை நிறைவேற்றும்விதமாக விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. துணை முதல்வர் பதவியோடு நிதித்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளையும் பெற்றுக் கொண்டார் பன்னீர்செல்வம்.
ஓரம்கட்டப்படும் ஓபிஎஸ் அணி
ஆனாலும், அரசில் எடுக்கப்படும் எந்த முடிவுகளையும் தங்களிடம் தெரிவிப்பதில்லை என்ற ஆதங்கம் ஓபிஎஸ் தரப்பினருக்கு இருந்து வந்துள்ளது. ஓபிஎஸ்ஸும் பாண்டியராஜனும் மட்டுமே பதவியைப் பெற்றுக் கொண்டனர். நமக்கு வாரியத் தலைவர் பதவியோடு கௌரவ அரசுப் பதவிகளோ வழங்காமல் புறக்கணித்துவிட்டனர் என்ற கோபம் பகிரங்கமாக ஓபிஎஸ் அணியில் வெடித்து வருகிறது.
மைத்ரேயன் கொந்தளிப்பு
மதுசூதனனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்ததையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர் ஓபிஎஸ் அணியினர். இந்நிலையில், இன்று ஃபேஸ்புக் பக்கத்தில் உச்சகட்டமாகக் கொந்தளித்திருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. மைத்ரேயன்.
புறக்கணிக்கும் அமைச்சர்கள்
அவர் தன்னுடைய பதிவில், கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் பருவமழையினால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அமைச்சர்களும் அதிகாரிகளும் தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால் அமைச்சர்கள் வருகை குறித்து பொறுப்பாளர்கள் எந்த தகவலும் தருவதில்லை என்பது கழகத் தொண்டர்களின் ஆதங்கம். ஏன், எனக்கே எந்த தகவலும் இல்லை.
பணியாற்ற அழைப்பு
தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர் தங்கள் பகுதிகளில் தங்களால் இயன்ற அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள். மக்களால் நாம், மக்களுக்காக நாம் என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். மக்கள் உங்களை அங்கீகரித்தால் இன்று உங்களை புறக்கணிப்பவர்கள் பிற்காலத்தில் உங்களை தேடி வருவார்கள். மக்கள் பணியே மகேசன் பணி' எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதையே மைத்ரேயன் பதிவு சுட்டிக் காட்டுகிறது. கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து படிப்படியாக நம்மை ஒதுக்கி வைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன என்ற குரல்களும் ஓபிஎஸ் முகாமில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.