அய்யய்யோ 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? ஆளைவிடுங்கப்பா.. அலறிய தினகரன்
ஓபிஎஸ் அணி 11 எம்.எல்.ஏக்கள் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறதாம் சசிகலா அணி.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலையே எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் தாங்க முடியாது என கூறி ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையை கைவிட முடிவு செய்துள்ளாராம் டிடிவி தினகரன்.
அதிமுகவின் துணைப் பொதுச்செயலராகிவிட்ட டி.டி.வி. தினகரன் தினமும் ஏதாவது ஒரு கூட்டத்தை கூட்டி இருப்பை பதிவு செய்து வருகிறார். இதனடிப்படையில் சசிகலா அணியின் மூத்த தலைவர்களை அழைத்து அண்மையில் தினகரன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அப்போது ஓபிஎஸ் ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என யோசனை தெரிவித்திருக்கிறார். ஆனால் அதிமுக நிர்வாகிகளோ முதலில் 2 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தில் சசிகலாவின் பொதுச்செயலர் நியமனமே கேள்விக்குறியாகி இருக்கிறது; தற்போது 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்துக்குப் போவார்கள்.. சிக்கலுக்கு மேல் சிக்கல்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் 11 எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஒருவேளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டால் 6 மாதங்களுக்குள் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலிலேயே நாம் என்னவாகப் போகிறோம் என்பது தெரியவில்லை; இன்னும் 11 தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றால் திமுக எளிதாக வென்றுவிடும். அப்படி திமுக வென்றுவிட்டால் ஆட்சியே பறிபோகும் நிலைமையும் உருவாகிவிடும் எனவும் எச்சரித்திருக்கின்றனர்.
இதை பொறுமையாக கேட்டுக் கொண்ட தினகரன், ஆர்.கே.நகரில் முதலில் ஜெயிக்க வழியைப் பார்ப்போம்... அதில் வெற்றி பெற்ற பிறகு யோசிப்போம். 11 தொகுதி இடைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நம்மால் சந்திக்க முடியாது; அதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது இப்போது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவோம் என்ற முடிவைத் தெரிவித்தாராம். மக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சசி அணியை பீதியடைய வைத்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications