அய்யய்யோ... ஆர்.கே.நகரையே கூவத்தூராக்க தினகரன் கோஷ்டி பகீர் ப்ளான்
ஆர்கே நகர் அதிமுகவினருக்கு பணம் கொடுத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் கூவத்தூர் பாணி திட்டத்துடனேயே டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
சென்னை: எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்த கூவத்தூர் பாணியில் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவினருக்கு பணம் கொடுத்து அவர்களையும் ஓட்டு போடும் வரை கண்காணிப்பிலேயே வைத்திருக்கும் பகீர் திட்டத்துடனேயே டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் தொடக்கம் முதலே போட்டியிடுவதில் அக்கறை காடாமலேயே இருந்தாராம் தினகரன். ஆனால் தினகரனை முன்னிறுத்தும் புதிய நால்வர் அணிதான் உசுப்பேற்றிவிட்டே கொண்டிருந்ததாம்.
பணம் கொடுத்து வளைப்போம்
அதாவது திமுக, ஓபிஎஸ் அதிமுகவினரை சமாளிக்க நீங்கள் போட்டியிடுவது மட்டுமே சரியாக இருக்கும்; வேறு ஒருநபர் போட்டியிட்டால் நிச்சயம் நமது ஆதரவாளர்கள் விலைபோய்விடுவார்கள்.. எதிர்க்கட்சிகள் விலைபேசுவதற்கு முன்னதாக நாமே பணம் கொடுத்து வளைத்து போடுவோம் என தூபம் போட்டதாம் அந்த நால்வர் அணி.
கண்காணிப்பும் கவனிப்பும்...
இந்த நால்வர் அணியில் சென்னை பிரமுகர்தான் அந்த பகீர் திட்டத்தையும் டிடிவி தினகரனிடம் கூறியிருக்கிறார். நம்ம கட்சியினர் மட்டும் நமக்கு வாக்களித்தாலே போதும்... எளிதாக வென்றுவிட முடியும்; அவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத பணத்தைக் கொடுப்போம்... அப்படி பணம் வாங்கும் நபரை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்வோம்... நமக்கு ஓட்டுப் போடவில்லை என்றால் 'கவனிக்க' வேண்டிய விதத்தில் கவனிப்போம் என எச்சரிக்கையும் விடுப்போம்.. இப்படி கூவத்தூர் பாணியில் தடாலடி காட்டினால் எளிதாக வென்றுவிட முடியும் என கூறியிருக்கிறார்.
ஒப்புக் கொண்ட தினகரன்
50 பேருக்கு 10 கண்காணிப்பாளர்கள் என ஆளையும் போட்டு வைப்போம்... எப்படி நம்மை மீறி ஓட்டு போடுவார்கள் என பார்த்துவிடலாம் என ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கின்றனர் டிடிவி தினகரனிடம்... இதன் பின்னரே சரிதான்... கூவத்தூரில் ஜெயித்தது போல ஆர்கே நகரிலும் வென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் டிடிவி தினகரன்.
பீதியில் அதிமுக நிர்வாகிகள்
இந்த தகவல் ஆர்கே நகர் அதிமுகவினருக்கு தெரிய வர ஆடிப்போய் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம். பணம் வாங்கிவிட்டு ஓட்டுப் போடவில்லையெனில் உயிரையே எடுத்தாலும் எடுப்பார்களோ என பீதியில் இருக்கிறார்களாம் ஆர்கே நகர் அதிமுக நிர்வாகிகள்.