நாமக்கல் அருகே தூக்குத்தேர் முறிந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் காயம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது தூக்குத்தேர் முறிந்து விழுந்ததில் ஓருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தொடங்கி தூக்குத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா கடந்த 11ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அதைதொடர்ந்து 32 உயரம் கொண்ட தூக்குத்தேர் அமைக்கப்பட்டு, கடந்த 4 நாட்களாக அருகில் உள்ள கணபதிபாளையம், செல்லிபாளையம், தொட்டிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், வடுக்கப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு கிராம சுற்று நடைபெற்றது.
தூக்குத்தேர் உள்ளூர் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மாலை 5 மணியளவில் திடீரென தூக்குத்தேர் மேல் பகுதி முறிந்து விழுந்தது. இதில் கணபாதிபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்(42) உள்ளிட்ட 4 பேர் சிக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் உயரிழந்தார். ஜெகதீசன், கார்த்திக், ரமேஷ் ஆகிய 3 பேரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேரில் சிக்கி உயிரிழந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பக்தர்களை நாமக்கல் எம்எல்ஏ கேபிபி.பாஸ்கர், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இவ்விபத்து குறித்து மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications