கச்சியப்பர் சிலை திருட்டில் கோவில் அர்ச்சகரே கைதான கொடுமை -சிலையை மதுபோதையில் வீசியதாக வாக்குமூலம்
கோயில் சிலையை திருடியது தொடர்பாக அர்ச்சகரை கைது செய்துள்ளது காவல்துறை.
Recommended Video

காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நடந்த சிலை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோயில் அர்ச்சகர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சியில் மிகவும் புகழ்பெற்றது காஞ்சி குமரக்கோட்டம் கோயில். இத்திருக்கோவிலில் கச்சியப்பருக்கு 29 சென்டிமீட்டர் உயரமும் 18 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட, சுமார் ஏழரை கிலோ எடையுள்ள வெண்கல சிலை இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை இந்த சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு நகரின் முக்கிய வீதிகளில் உலா வருவது வழக்கம்.

மார்ச் முதல் வாரத்தில் இந்த விழா நடைபெற்று உற்சவ சிலைகளுடன் வைக்கபட்டிருந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி கச்சியப்பர் சிலை காணாமல் போனதாக கூறப்படுகிறது.
எனவே சிலை திருட்டுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார், கோயில் அர்ச்சகர் கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிலையை, அருகிலுள்ள சர்வதீர்த்த குளத்தில் மது போதையில் வீசியதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் 6 மணி நேரம் தேடியும், கச்சியப்பர் சிலை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கோவில் அர்ச்சகரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவரை போலீசார் கைது செய்து, கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிபதி உத்தரவின்படி, திருச்சி மத்திய சிறையில் 15 நீதிமன்ற காவலில் அர்ச்சகர் கார்த்திக் அடைக்கப்பட்டார். எனினும், தற்போது வரை சிலை மீட்கப்படாததால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications