கடத்தப்பட்ட 2 தமிழ்நாட்டுக் கோவில் சிலைகள்- ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை வருகை!
சென்னை: இந்தியாவைச் சேர்ந்த பழம்பெருமை மிக்க தமிழக கோவில் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு டெல்லியில் இருந்து இன்று சென்னைக்கு விமானத்தில் வந்தடைய உள்ளன.
தமிழக கோவிலான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபுரந்தான் கோவிலில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலையும், விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட அர்த்தநாரீஸ்வாரர் சிலையும் ஆஸ்திரேலியாவிற்கு கடத்திச் செல்லப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இந்த சிலைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சிலைகளை மீட்க உத்தரவு:
கடத்தப்பட்ட 2 சிலைகளையும் மீட்டு, மீண்டும் தமிழகத்திற்கு கொண்டுவர, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
தமிழக அரசு மூலம் முயற்சி:
அவரது உத்தரவின்பேரில் டி.ஜி.பி ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி பிரதீப் வி.பிலீப், சிலைகள் திருட்டுப் பிரிவு டி.ஐ.ஜி பொன்மாணிக்கவேலு ஆகியோர், தமிழக அரசு மூலம் முயற்சி மேற்கொண்டனர்.
முதல்வர் அதிரடி:
முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி உத்தரவிற்கேற்ப தமிழக சிலை திருட்டு தடுப்பு போலீசார் எடுத்த முயற்சிக்கு கடந்த வாரம் வெற்றி கிடைத்தது.
ஆஸ்திரேலியப் பிரதமர்:
கடத்தப்பட்ட சிலைகள் விமானம் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து, டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. டெல்லியில் ஆஸ்திரேலிய பிரதமர், அந்த சிலைகளை, பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
சென்னை வருகை:
அந்த சிலைகளை டெல்லியில் இருந்து, சென்னைக்கு கொண்டுவர போலீசார் ஏற்பாடு செய்தனர். சிலைகளை வாங்கி வர சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.
தொல்லியல் ஆய்வு:
இன்று காலை அந்த சிலைகள், விமானத்தில் சென்னை கொண்டுவரப்படுகின்றன. அந்த சிலைகளை தொல்லியல்துறை முன்னாள் உயர் அதிகாரி நாகசாமி முறையாக ஆய்வு செய்கிறார்.
முறையான பூஜைகள்:
அதன்பிறகு சிலைகளை சென்னை கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்வார்கள். அங்கு அந்த சிலைகளுக்கு முறையாக பூஜை செய்யப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:
பின்னர் அங்கு சிலைகள் காட்சிக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அந்த சிலைகள் முறையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.