சசி ஆதரவாளர்களுக்கு மட்டும் டெண்டர்.. பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுப்பதாக குற்றம்சாட்டி ஓபிஎஸ் ஆதரவு பெண் எம்எல்ஏ பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சசிகலா ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவு பெண் எம்எல்ஏவான மனோரஞ்சிதம் நாகராஜ் இன்று பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளின் குடி நீர் தேவைக்காக கிணறு அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல், மோட்டர் பழுது நீக்குதல் போன்ற தேவைகளுக்காக 38 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைகளுக்கான டெண்டர் பற்றி பேச ஊத்தங்கரை பி.டி.ஒ அலுவகம் சென்றார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ். அங்கு 38 லட்ச ரூபாய்க்கான பொது டெண்டர் விடாமல் முழுவதுமாக சசிகலா ஆதரவு அதிமுகவினருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மனோரஞ்சிதத்திற்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
இதனால் கடுப்பான எம்எல்ஏ மனோரஞ்சிதம் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் ஒன்றிய அலுவலக வாசலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு ஊத்தங்கரை திமுகவினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.