குளத்தில் பதுங்கிய ரவுடி! ட்ரோன் உதவியுடன் தட்டி தூக்கிய காவலர்கள்! கெத்து காட்டிய தென்காசி போலீஸ்
தென்காசி: தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த சாகுல் ஹமீது என்பவர் பதுங்கி இருந்த இடத்தை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்த சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சாகுல் ஹமீது என்ற நபர் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தென்காசி போலீசார் இந்த சாகுல் ஹமீது என்பவரைக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அவரை தற்போது தென்காசி போலீசார் கண்டுபிடித்து, கைது செய்துள்ள சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொலை முயற்சி
இந்நிலையில், இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர், தென்காசி பச்ச நாயக்கன் பொத்தை குளம் பகுதியில் பதுங்கி உள்ளார். மேலும், அப்பகுதியைத் தான் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அங்கு யாரும் வரக்கூடாது என்றும் சாகுல் ஹமீது பொதுமக்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் வந்துள்ளார். மேலும் அங்கு அங்கு ஆடு மேய்க்கச் சென்ற பீர் முகம்மது என்ற நபரை சாகுல் ஹமீது பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாகவும் அதில் பீர் முகமது படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குளத்தில் பதுங்கிய ரவுடி
படுகாயமடைந்த பீர் முகமது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகவும் தென்காசி போலீசார் சாகுல் ஹமீதை தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் பொத்தை குளம் பகுதியில் மறைந்துள்ளார். மேலும் இன்று காலை அப்பகுதிக்குக் குளிக்கச் சென்ற பெண்களையும் அவர் மிரட்டி, அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார்.

ட்ரோன் உதவி
பொத்தை குளம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் என்பதால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குளத்தில் சாகுல் ஹமீது எங்கே பதுங்கி உள்ளார் என்பதை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். ட்ரோன் விமானம் மூலம் அந்த குளத்தை ஆய்வு செய்த போது, குளத்தின் நடுவே பயங்கர ஆயுதங்களுடன் சாகுல் ஹமீது பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
அதன் பின்னர் போலீசார், சாகுல் ஹமீது பதுங்கி இருந்த இடத்திற்குச் சென்று, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரை கைது செய்தனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த ரவுடியின் இருப்பிடத்தை டிரோன் உதவியுடன் கண்டறிந்து, விவேகமாகக் கைது செய்த தென்காசி போலீசாரின் இந்த செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.












Click it and Unblock the Notifications