நடிகர்களின் ஆசை வார்த்தை.. நம்பிய பெண்! ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு தற்கொலை - சட்டமும் காலாவதி
தென்காசி: ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இன்று அந்த சட்டம் காலாவதியாக உள்ள நிலையில், தென்காசியை சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் குமார் மண்டல். இவரது மனைவி பந்தனா மஜ்கி. இருவரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் வசித்து வந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் இவர்கள் வேலை செய்து வந்தனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிடிவாதம்... தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று காலாவதியாகிறது!
ஆன்லைன் சூதாட்டம்
இந்த நிலையில் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் நடிகர்களின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் அஜய்குமார் மண்டல் மனைவி பந்தனா ஆன்லைன் சூதாட்ட செயலியை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார். இந்த விளையாட்டில் அவர் 70 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதன் காரணமாக கணவர் அஜய் குமார் மண்டல் மனைவி பந்தனாவை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மனைவி பந்தனா நேற்று வேலைக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே தங்கி இருக்கிறார். இந்த நிலையில் பணத்தை பறிகொடுத்த மன உளைச்சலில் அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பந்தனாவின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் தற்கொலை
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரம்மி என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பயன்பாடு அதிகரித்தன. வேலையிழப்பால் வாடிய மக்கள் தொலைக்காட்சிகள், செல்போன்களில் வரும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த நடிகர்களின் பேச்சை கேட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணி அதை விளையாட தொடங்கினார்கள்.
ஆன்லைன் சூதாட்ட மோசடி
தொடக்கத்தில் சிறிய தொகையை பரிசாக வழங்குவதைபோல் வழங்கிவிட்டு மக்களின் நம்பிக்கையை பெறும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், மக்கள் பெரும் தொகையை கொடுத்து பந்தயத்தில் பங்கேற்றவுடன் அவர்களை வீழ்த்திவிட்டு பெரிய தொகையை எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதே ஐடியாவுடன் பல பெயர்களின் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் அறிமுகமாகின.
தற்கொலைகள்
இதனை பதிவிறக்கம் செய்த மக்கள் பெரும் தொகையை பறிகொடுக்கத் தொடங்கினர். கடன் வாங்கி சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்து பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் விரக்தியடைந்த பலர் அடுத்தடுத்து தற்கொலை என்னும் துயர முடிவை தேடினர். இதில் காவல்துறையை சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் அடங்குவார்கள்.
காலாவதியாகும் சட்டம்
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அளிப்பு வைக்கப்பட்டு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இன்றுடன் இச்சட்டம் காலாவதியாக இருக்கும் நிலையில், ஒரு பெண் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.