மருது சகோதரர்கள் நினைவிடத்தில் தி.மு.க.வினர் போராட்டம்... அ.தி.மு.க.வினரும் குவிந்ததால் பரபரப்பு!!
திருப்பத்தூர்: சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா, தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியகருப்பன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அந்த இடத்தில் தமிழக அரசின் பிரசார வாகனத்தை அகற்றக் கோரி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்தததால் ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்கள் மீது போர் தொடுத்து சிறை பிடித்தனர்.
பெரிய மருது, சின்ன மருது என அழைக்கப்படும் மருது சகோதரர்கள் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி திருப்பத்தூர் காளையார்கோவிலில் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி தமிழக அமைச்சர்கள் கோகுல இந்திரா உள்ளிட்டோர் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் தி.மு.க.வின் எம்.எல்.ஏ. பெரிய கருப்பன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர். அப்போது தமிழக அரசின் பிரசார வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பெரிய கருப்பன் தலைமையில் தர்ணா போரட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.