ரிஷிவந்தியம் அருகே பயங்கர வெடி சத்தம்.. பதறிய மக்கள்.. பரவிய ‘பகீர்’ வீடியோ.. காவல்துறை வார்னிங்!
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சுற்று வட்டார பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டதாகவும், இந்த சத்தம் அங்கு சில கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு கிராமங்களைச் சேர்ந்த மக்களால் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் மையனூர், மெய்யூர், கொளத்தூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களால் இந்த பயங்கர சத்தம் உணரப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, போலீசாருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து, டிஎஸ்பி மனோஜ் குமார், காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரை கொண்ட போலீசார் குழு பல மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதா என ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வருகின்றனர். கல் குவாரியில் இருந்து வெடிச் சத்தம் வந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் சத்தம் ஏற்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அதன் காரணமாகவே பயங்கரமான வெடி சத்தம் கேட்டதாகவும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அப்பகுதியினரிடையே வாட்ஸ் அப் குழுக்களில் இந்த வீடியோ படுவேகமாகப் பரவியுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வெடி சத்தம் கேட்டது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அப்பகுதியில் பரவி வரும் வீடியோ 2021ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்தது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications