உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: தமிழகத்தில் முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி, வாரணாசி, மதுரா உள்ளிட்ட நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த காரில் 150 கிலோ ரசாயண வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உளவுத் துறை எச்சரிக்கையை அடுத்து இந்தியாவில் உள்ள முக்கிய இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த பழநி முருகன் கோவில், திருவரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய நகரங்களில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.