தமிழ்நாடு, புதுவையில் நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு! விளக்கம் பெற கட்டுப்பாட்டு அறை திறப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்கி, ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள்.
பிளஸ் டூ தேர்வு நாளை தொடங்கும் நிலையில், மாணவிகள் 4,47,891 பேர்களும், மாணவர்கள் 3,91,806 பேர்களும் தேர்வு எழுத உள்ளனர். 42,347 தனித்தேர்வர்களும் பிளஸ்-2 தேர்வை எழுத உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 தேர்வுக்கு 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகள் 97 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். இவர்கள் புழல் சிறையில் எழுத வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழில் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்வழியில் படித்து தேர்வு எழுதும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் 1 மணிநேரம்) வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் 1,850 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
பிளஸ்-2 தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வுக்கான முன் பணிகளை செய்துவருகிறார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள் செல்போனை கண்டிப்பாக கொண்டு செல்லக்கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் செல்போன்களை கொண்டுசெல்ல கூடாது. இந்த அறிவுரையை மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தேர்வு நேரங்களில் பிட் அடித்தாலோ, காப்பி அடித்தாலோ, ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, அல்லது அவர்களை ஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம் முயற்சி செய்தால் அந்த பள்ளிக்கூட தேர்வு மையத்தை மட்டுமின்றி பள்ளியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்வோம் என பள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள், தேர்வு எழுதுபவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். எனவே 044-8012594114, 8012594124, 8012594125, 8012594126 ஆகிய தேர்வு கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
15ம் தேதி தொடங்க உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்களுக்கும், இந்த கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தெளிவுபெறலாம்.











Click it and Unblock the Notifications