தம்பித்துரை பேசுவதைப் பார்த்தால்....!
திருச்சி: தமிழக சட்டசபைக்கு முன்கூட்டேய தேர்தல் நடத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை அது உண்மையாக இருக்கலாம் என்று ஊகிக்கும் வகையில் ஒரு பேச்சைப் பேசியுள்ளார் திருச்சி அருகே.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதுதொடர்பான சிந்தனையில் அதிமுக உள்ளதாகவும். அதற்கு பல காரணங்கள் உள்ளன என்றும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி அருகே நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கலந்து கொண்டு பேசிய பேச்சு எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
மண்ணச்சநல்லூரில் நடந்த கூட்டத்தில் தம்பித்துரை பேசுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்த வில்லை. ஆனால், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் அறிந்து திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறார்.
கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது முக்கியமல்ல. வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிறப்பாக பணியாற்ற கூடியவர்களாக இருக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம். அதனால், கட்சி தேர்தலில் வெற்றி பெறும் நீங்கள் இப்போதே தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றார் தம்பித்துரை.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தால் உடனடியாக சட்டசபையைக் கலைத்து தேர்தலை அறிவிக்க அதிமுக திட்டமிட்டிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications