யாருக்கு எவ்ளோ பணம்?... ஆதாரத்தை புட்டு புட்டு வைக்கும் தங்கதமிழ் செல்வன்
ஆர் கே நகரில் பண கத்தையையும் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் அடங்கிய நோட்டுப்புத்தகத்தையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் பறிமுதல் செய்தார்.
சென்னை: ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அங்கு ஓரிடத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த பணக் கத்தையையும் பெயர் பட்டியல் அடங்கிய நோட்டையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் பறிமுதல் செய்தார்.
ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப்பட்டுவாடா என்று தொகுதியே அல்லோகலப்படுகிறது. ஆங்காங்கே வீடுகளில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் பணம் பறிமுதல் செய்தவர்களை மக்கள் பிடித்து கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.
பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போர்க் களமாக காட்சி அளிக்கும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்த புகாரையும் போலீஸார் வாங்க மறுக்கின்றனர் என்று திமுக, தினகரன் அணியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தையும் நோட்டு புத்தகத்தையும் தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் பறிமுதல் செய்தார். அந்த நோட்டில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டு, 15 குடும்பத்தினருக்கு பணம் விநியோகிக்க வேண்டும் என்ற தகவலுடன் ஆண் வாக்காளர்கள் எத்தனை, பெண் வாக்காளர்கள் எத்தனை என்ற விவரங்களும் அடங்கியிருந்தன.
அவற்றை தங்க தமிழ் செல்வன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.