ஜெயக்குமார் சொல்லும் கணக்கு புரியலையே - தங்க தமிழ் செல்வன் கிண்டல்
அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் கணக்கை பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு இல்லை என்று அவரே ஒத்துக்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
சென்னை : எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தரும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறும் கணக்கு புரியவில்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்வதற்கு ஆதரவாக, 111 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறினார்.
2 எம்.எல்.ஏக்களால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார்.
9 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
அ.தி.மு.க சின்னத்தில் வெற்றிபெற்ற மூன்று எம்எல்ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் 9 பேர் ஆதரவாக உள்ளதாகவும் ஜெயக்குமார் கூறினார்.
இரண்டு மாவட்டச் செயலாளர்கள் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை என்றும் கூறினார்.
தங்க தமிழ் செல்வன்
இதனிடையே இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன், ஜெயக்குமார் சொல்லும் கணக்கு புரியவேயில்லை என்று கூறினார்.அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 135 பேரில் 21 பேர் தங்களிடம் உள்ளதாகவும், திமுகவுக்கு 89 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 8 பேர், முஸ்லிம் லீக்குக்கு ஒரு உறுப்பினர் இருக்கின்றார்கள்.
பெரும்பான்மையில்லை
அதிமுக கணக்கில் வரும் எஞ்சிய 113ல் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 3 பேர் தங்களிடம் உள்ளனர்.மேலும் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை அமைச்சர் ஜெயக்குமாரே ஒப்புக்கொண்டுவிட்டார் என்று தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.
பெயரை வெளியிடுவாரா?
எடப்பாடி பழனிச்சாமிக்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் ஆதரவு தருவதாக கூறினாரே அவர்கள் யார் யார் என்று 9 பேரின் பெயரை ஜெயக்குமார் வெளியிடுவாரா என்று கேட்ட தங்க தமிழ் செல்வன், ஆளுநர் இன்றும் இரு தினங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று ஆளுநர் கூறுவது சரியாக இருக்காது என்றும் கூறினார்.