ஜெ.வை நேரில் சந்தித்து நன்றி சொன்ன தங்கத் தமிழ் செல்வன்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பி.கண்ணன், தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், தேனி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் தங்கத் தமிழ் செல்வன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஆண்டிப்பட்டி எம்எல்ஏவான தங்கத் தமிழ்ச் செல்வனுக்கும் இடையில் தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவில் குறைந்துள்ள நிலையில், தங்க தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏவுக்கு புதிய பதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக தங்க தமிழ்ச் செல்வன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டார். அதேபோல தேனி மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளராக எம்.ராஜ்குமாரும், தேனி மாவட்ட மாணவர் அணி செயலாளராக எம்.செல்வமும் நியமிக்கப்பட்டனர்.

தேனி மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளராக எம்.மணியும், ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதியாக டி.ஆர்.என். வரதராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேனி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளில் சிலர் தங்க தமிழ்ச் செல்வனின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் பி. கண்ணன்; தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. விருகை வி.என். ரவி; தேனி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ, மற்றும் கேரள மாநிலக் கழகச் செயலாளர் திரு. ஏ.எல். பிரதீப் ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.












Click it and Unblock the Notifications