தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு: மின்வெட்டு நேரம் கொஞ்சம் குறைப்பு
நெல்லை: வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் தொடர்ந்து காற்று வீசுவதால் மின்தடை தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் 1000க்கும் அதிகமான மெகவாட் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி காலங்களில் மின் நுகர்வு தடை தற்காலிகமாக குறைக்கப்படும். கடந்த 3 மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசியதால் காற்றாலை மின்சார உற்பத்தி கிடு கிடுவென உயர்ந்தது.
அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 2,500 மெகாவாட்டுக்கும் மேலாக காற்றாலை மூலம் மின்சாரம் கிடைத்து வந்தது. இதனால் மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் முதல் தேதியில் இருந்து காற்று நின்றுவிட்டது. இதனால் மீண்டும் மின்வெட்டு தலை தூக்கியது. கடந்த 1 வாரத்திற்கும் மேலாக இந்த நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில் வட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கான மின் உபயோகம் குறைந்துள்ளது. இதனால் மின்வெட்டு தற்காலிமாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 2 நாட்களாக மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்து வருகிறது. இரவு காற்றாலை மூலம் 1,599 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. அதிகாலை 2 மணிக்கு அது 76 மெகாவாட்டாக குறைந்தது. காலை 8 மணி முதல் மீண்டும் காற்று வீசத் தொடங்கியதால் காற்றாலை மின் உற்பத்தி 1,053 மெகாவாட்டை கடந்தது.
நேற்று பகலில் வெயில் அடித்த போதும் காற்று பலமாக வீசியதால் காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து கை கொடுத்தது. இதனால் நீண்ட நேர மின்வெட்டுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.