கொடநாடு கொலையில் தப்பிய கறுப்பு ஆடுகள்... சயான் தற்கொலை முயற்சியின் பின்னணி
கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் தற்கொலை முயற்சி செய்ததன் பின்னணியில் கொலை வழக்கில் தப்பியவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 10 பேரை போலீசார் கைது செய்து விட்டதாக கூறினாலும், முக்கிய குற்றவாளிகள் இருவர் தப்ப வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சயான் தற்கொலை முயற்சி இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
எஸ்டேட் பங்களாவில் இருந்த பல பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த கனகராஜ் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டவருமான சயான் ஏப்ரல் 29ம் தேதி கார் விபத்தில் படுகாயமடைந்தார். அவரது மனைவி, மகள் மரணமடைந்தனர். படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சயான் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கடந்த 6ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக கோத்தகிரி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

எஸ்டேட் பங்களா
கொடநாடு எஸ்டேட் பங்களாவிற்கும் சயானை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சயான் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது எப்படி? எந்த வாகனத்தை பயன்படுத்தினோம் என்று கூறியதாக தெரிகிறது.

விஐபி ஸ்டிக்கர்
கொள்ளையடிக்க சென்ற வாகனத்தில் விஐபி என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு, அதிமுக கொடி கட்டிக்கொண்டு சென்றதாக தெரிவித்தாராம் சயான். எஸ்டேட் பங்களாவரை எந்த சிக்கலும் இன்றி சென்றதாக கூறிய சயான், 10 ஆம் எண் கேட்டை நெருங்கிய போது முகமூடி அணிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஓம் பகதூர் சந்தேகம்
முதலில் எதிர்ப்பை காட்டாமல் கேட் கதவை திறந்த ஓம் பகதூர், பின்னர் முகமூடி அணிந்திருந்தவர்களைப் பார்த்து சந்தேகப்பட்டு தடுத்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளார் சயான்.

15 நாள் நீதிமன்ற காவல்
இதனையடுத்தே கோத்தகிரி நீதிமன்றத்தில் சயானை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் சயானை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், சயானுக்கு கையில் வலி ஏற்பட மீண்டும் கோவையில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்கொலை முயற்சி
இதனிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சயான் நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பியுள்ள முக்கிய பிரமுகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

எய்தவன் யார்
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் மரணமடைந்து விட்டார். சயான் கைது, யாருக்கு சிக்கலை ஏற்படுத்துமோ? நாம் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்தே சயானை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.

ஓபிஎஸ் அணி
கொடநாடு, கொலை கொள்ளை வழக்கில் முக்கிய நபர்கள் இருவர் தப்பவைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதனை போலீஸ் தரப்பினர் மறுக்கின்றனர். இன்னும் என்னென்ன நடக்குமோ.












Click it and Unblock the Notifications