புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை.. கிரண்பேடியின் கொடும்பாவி எரிப்பு.. காங். போராட்டத்தால் பதற்றம்!
புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கிரண்பேடியின் கொடும்பாவியை எரித்த அவர்கள் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராக செயல்படும் கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் திமுக இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
முழு அடைப்பு காரணமாக ஆளுநர் மாளிகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் திடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கிரண்பேடியின் கொடும்பாவியை எரித்த அவர்கள், கிரண் பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.