முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி வழக்கு: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
நெல்லை: திருநெல்வேலி வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரியாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பணி நியமனம் தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த நெருக்கடி காரணமாகவே முத்துக்குமாரசாமி 2014 பிப்ரவரி 20ல் தச்சநல்லூரில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி, அப்போதைய வேளாண் பொறியியல்துறை தலைமை பொறியாளர் மு.செந்தில் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யபட்டனர். பின்னர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேருக்கு அண்மையில் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் சிபிசிஐடி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இவ் வழக்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், இவ் வழக்கை திருநெல்வேலியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதோடு, ஜனவரி 5 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து நேற்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications