திருப்பூர் கலெக்டர் அலுவலக முகப்பில் தேன்கூடு கலைந்தது.. சிதறி ஓடிய மக்கள்.. 20 பேர் காயம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் தேன் கூடு கலைந்ததால் போலீசார் உட்பட 20க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் இருந்த தேன் கூடு திடீரென கலைந்தது. இதனால் தேனீக்கள் அங்கிருந்த பொதுமக்களை தாக்க துவங்கியது.

இதனால் மக்கள் குறை தீர்க்கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மட்டுமல்லாது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் ஆங்காங்கே சிதறி ஓடினர். இதில் காவலர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை தேனீக்கள் தாக்கியது.
பாதிப்படைந்த அவர்கள் அனைவரும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல்துறையினரின் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் உடனடியாக அடைக்கப்பட்டன.
காவல் துறையினர் பொதுமக்களை சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளேயே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தினர். கடந்த ஒரு வாரமாக தேன்கூடு பெரிய அளவில் இருந்த நிலையில் அதனை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களை தேனீக்கள் தாக்கி பெரிதும் சிரமத்துக்குள்ளானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications