நாங்குநேரி: குற்ற உணர்வே இல்லை.. சிறையில் கெத்தாக உணரும் சிறுவர்கள்! 'எவிடன்ஸ்' சொன்ன ஷாக்
நாங்குநேரி: திருநெல்வேலி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பயிலும் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவரை வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் சரமாரியாக வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பினர், கைது செய்யப்பட்ட சிறார்கள் ரிலாக்ஸாக ஜாலியாக இருப்பதாக கூறியுள்ளனர்.
நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த அம்பிகா-முனியாண்டி தம்பதியினரின் மகனான சின்னதுரை வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னதுரையுடன் நாங்குநேரி மற்ற சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். இவர்கள் பெருந்தெரு மாணவர்களிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், அவர்களிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. சில நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட்டுவிட்டு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்களை பணம் கொடுக்க கட்டாயப்படுத்திய சம்பவமும் நடந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நடத்த பல சம்பவங்கள் காரணமாக சின்னதுரை பள்ளி செல்வதை நிறுத்தியிருக்கிறார். இது குறித்து பெற்றோர் விசாரிக்கையில் உண்மைகள் வெளிவந்துள்ளன. பின்னர் அவர்கள் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அன்று இரவு சின்னதுரை வீடு புகுந்து குற்றம்சாட்டப்பட்ட சிறார்கள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சின்னதுரை, அவரது சகோதரி படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தின் போது குறுக்கே வந்த இவர்களது தாத்தாவை சிறார்கள் தள்ளி விட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து எவிடன்ஸ் அமைப்பினர் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அதன் இயக்குநர் கதிர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "இந்த கொலைக்கு சாதிதான் அடிப்படை காரணம். சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையால்தான் சின்னதுரை பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார்.
நன்றாக படிக்கும் மாணவன் பள்ளிக்கு வராமல் இருந்தது குறித்து தலைமை ஆசிரியர் விசாரிக்கையில் சாதிய ஒடுக்குமுறை விஷயம் வெளியில் வந்திருக்கிறது. இதை சின்னதுரை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்திருக்கிறார். இதனையடுத்து அன்று இரவே பிற சிறார்கள் சின்னதுரையின் வீட்டிற்கு சென்று இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவருடைய 13 வயது தங்கையும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 6 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறார்களின் வளர்ப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. அவர்களிடம் இன்றும் சாதி வெறி அப்படியே இருக்கிறது. அவர்களுக்கு தாங்கள் எந்த மாதிரியான குற்றத்தை செய்தோம் என்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இந்த சிறார்களுக்கு எந்த பதட்டமும் இல்லை. மிகவும் இயல்பாக ஜாலியாக இருக்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் இவர்கள் மீது ஏற்கெனவே இரண்டு முறை குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது என்பதுதான். எனவே தீவிர நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications