போலீஸ் பாதுகாப்புடன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்எல்ஏ!
நெல்லை அருகே சமுதாய நலக்கூட கட்டிட அடிக்கல் விழாவுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சட்டசபை உறுப்பினர் பங்கேற்றார்.
நெல்லை: சமுதாய நலக்கூட கட்டிட அடிக்கல் விழாவுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சட்டசபை உறுப்பினர் பங்கேற்றார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா பண்பொழி கிராமத்தில் 5க்கும் மேற்ப்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இந்நிலையில் ஜிம்கின்கா என்ற பள்ளிவாசல் வளாகத்தில் ரூபாய் 1 கோடியே 30 இலட்சம் செலவில் ஜமாஅத் சார்பில் சமுதாய நலக்கூடம் கட்டிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று கடையநல்லூர் சட்டசபை உறுப்பினர் அபூபக்கர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து இந்த பகுதியில் பெரியபள்ளிவாசல் ஒன்று அனைத்து ஜமாத்தார்களுக்கும் சேர்ந்து உள்ளது. அதனை பராமரிப்பு செய்தபின்னர் இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்திட ஏராளமானவர்கள் வலியுறுத்திய நிலையில் அதனை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் இந்த விழாவை நடத்திட ஏற்பாடுகள் செய்ததால் விழாவுக்கு வரும் சட்டசபை உறுப்பினரை தடுத்து நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியானதைத்தொடர்ந்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்போடு சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் அழைத்துவரப்பட்டு அடிக்கல் நாட்டுவிழா நிறைவடைந்தது. இதனால் அங்கு சில மணி நேரம் பரப்பரப்பு காணபபட்டது.