ஈரோடு திண்டலில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற விவசாயிகள்.. விரட்டியடித்த போலீசார்
திண்டலில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர்.
Recommended Video
ஈரோடு: விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு திண்டலில் ஆர்ப்பாட்டம் நடத்த ஒன்று திரண்ட விவசாயிகளை போலீசார் விரட்டியடித்தனர்.
தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்து மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் விளைவாக விவசாயிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைளை வெளியிட்டு வருகின்றனர். ஆயினும் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு உள்ளனர்.
ஒவ்வொரு இடமாக உயர்மின்கோபுரம் அமைத்து வந்த வருவாய்த்துறையினர், தற்போது ஈரோடு மாவட்டத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். இதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் முதல் அனைத்து வகை போராட்டத்தையும் கையிலெடுத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி இன்றும், விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை கண்டிக்கவும், நடைபெறும் பணிகளை தடுத்து நிறுத்தவும் திண்டலில் விவசாயிகள் திரண்டர். விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒன்று சேர்ந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.