கமலின் கோவை மண்டல சுற்றுப்பயணம் ரத்து ஏன்? : மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் விளக்கம்
கமலின் கோவை மண்டல சுற்றுப்பயணம் ரத்து ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கோவை மண்டல சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
கடந்த மாதம் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் திருப்பூர், நீலகிர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பயணத்திட்டம் வெளியாகி இருந்தது.
கோவை கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்த தொண்டர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த சுற்றுப்பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பேசுகையில், கட்சியின் வளர்ச்சிப்பணிகளில் கமல் தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள் இணைந்துள்ளனர்.
எனவே, விரைவில் நிர்வாகிகளை அறிவிக்க வேண்டிய பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் வகையில் கட்டமைப்பு பலப்படுத்தபட்டு வருவதால், கோவை பயணம் தள்ளிப்போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.