ஹைட்ரோ கார்பன் திட்டம்ன்னு யாரும் உள்ளே வரக் கூடாது.. தீவிரமடையும் நெடுவாசல் மக்கள் போராட்டம்
இயற்கை எரிவாயு என்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதுக்கோட்டை நெடுவாசல் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள், சமூக இயக்கங்களின் ஆதரவு பெருமளவில
புதுக்கோட்டை: விரட்டி அடிக்கப்பட்ட மீத்தேன் திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்ற புதிய பெயரில் மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
இதனை நன்றாக புரிந்து கொண்ட நெடுவாசல் மக்கள், இயற்கை எரிவாயு, ஹைட்ரோ கார்பன் என எந்தப் பெயரில் வந்தாலும் கடுமையாக எதிர்ப்பது என்று முடிவு செய்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் வரும் நாட்களில் இன்னும் தீவிரம் அடையும் என்று நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தில் செங்குத்தாக துளைகளையிட்டு எடுக்கப்படும் இந்த எரிவாயு திட்டத்திற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுனத்திற்குத்தான் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதே போன்ற திட்டத்தை கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி சற்று தெரிந்து கொள்ளலாம்.
மீத்தேனும் ஹைட்ரோ கார்பனும்
மீத்தேன் வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன். ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது அதன் வகைகளான மீதேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவைதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்றும் பிரிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறிகின்றனர்.
எப்படி எடுப்பது?
முதலில் நிலத்தில் செங்குத்தாகவும் பரவலாகவும் துளையிடப்படும். இந்த துளைகளின் ஆழம் 1000 முதல் 5000 மீட்டர்கள் வரை இருக்கும். அப்படி அமைக்கப்பட்ட துளையில் இருந்து ஹைட்ரோ கார்பன் என்ற எரிவாயு எடுக்கப்படுகிறது.
எந்த இடத்தில் எடுப்பது?
ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டிய பகுதிகளிலேயே செயல்படுத்தப்படுகிறது. ஆனால், நெடுவாசலில் அது விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.
விவசாயம் அழியும்
இதனால் பூமியில் உள்ள நீர் முற்றிலும் சுரண்டி எடுக்கப்பட்டு வறட்சி பூமியாக மாறிவிடும். புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் மலர் சாகுபடி அதிகம் நடைபெறும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால், விவசாயம் முற்றிலும் பாழாய் போகும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
வலுக்கும் எதிர்ப்பு
விவசாய பூமியை பாலைவனமாக்கும் இந்தத் திட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராடுவது என்று மக்கள் தீர்மானித்துள்ளனர். இதனால் இதுதொடர்பான அரசு அதிகாரிகள் யாரை கிராம மக்கள் உள்ளே விடுவதில்லை. ஆய்வுக்காக வரும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளின் வாகனங்கள் முற்றுகையிடப்பட்டு விரட்டி அடிக்கப்படுகின்றனர்.
தொடர் போராட்டம்
மேலும், உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்துப் போராட்டம் என தொடர்ந்து விவசாய அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 27ம் தேதி கூட உண்ணாவிரதப் போராட்டம் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ளது.
மக்களுக்கு ஆதரவு
இந்தப் போராட்டத்தை முன் எடுக்கும் மக்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. நேற்று சென்னையில் ஐ.டி. மக்களும் இதற்கு எதிரான போராட்டத்தில் குதித்தன. இதுதொடர்பான ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டு மக்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், கூடங்குளம் அணு எதிர்ப்பு இயக்கம் போல் பேரியக்கமாக மாறும் என்று இப்பகுதி மக்கள் ஆணித்தரமாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications