ஊடகர்களே, தலைவர்களையும் கொஞ்சம் பேச விடுங்க!
-எஸ் ஷங்கர்
2001-ம் ஆண்டு... யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்கிறது. பல ஊழல் குற்றச்சாட்டுகளுடன் வலம் வந்த ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கிறார். மே மாதம் பதவி ஏற்றவர், செப்டம்பரில் பதவி இழக்கிறார்.
சரியாக ஆறே மாதங்களில் டான்சி வழக்கிலிருந்து விடுபட்டு, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு அமோகமாக வென்ற ஜெயலலிதா, மீண்டும் முதல்வர் பதவி ஏற்கும் முன்பு, தனது வேதா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போதுதான் டிவி சேனல்கள் புதிதுபுதிதாகத் தோன்றிக் கொண்டிருந்த காலம்.

வேதா இல்லத்தின் உள்ளே, வாசலுக்கு முன்புறமுள்ள போர்டிகோ பகுதியில் செய்தியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். உள்ளூர், தேசிய தொலைக்காட்சிகள் குவிந்திருந்தன. அப்போதே 200-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கேமராக்கள்.
ஜெயலலிதா வரப்போகிறார் என்பது தெரிந்ததும், அதுவரை சற்று ரிலாக்ஸாக நின்றவர்கள், நெருக்கியடித்தனர். பல வீடியோ கேமராமேன்கள், பெரிய கேமிராக்களை தோளில் சுமந்தபடி படம் எடுத்தனர். ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டனர். ஒரு கேமரா யாரோ ஒரு எம்எல்ஏ தலையைப் பதம் பார்த்தது. இன்னொரு வீடியோ கேமிரா அன்றைய ஒரு நாளிதழ் நிருபரின் மொட்டைத் தலையில் ரத்தக் காயத்தையே ஏற்படுத்தியது.
ஜெயலலிதா வந்துவிட்டார். அவர் இந்த களேபரத்தைப் பார்த்து முகம் சுளித்தார். அவர் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன்பே, அவரை நோக்கி நீண்டது ஒரு கேமிராவும் மைக்கும். அவர் சட்டென்று பின்வாங்கி, உள்வாசலில் நின்றால். விட்டிருந்தால் அந்த கேமிரா அவர் நெற்றியை அல்லது முகத்தைப் பதம் பார்த்திருக்கும். கோபத்தில் அவர் முகம் சிவந்தது. ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவர் பேச ஆரம்பித்தபோது, வளவளவளவென்று ஒரே கூச்சல். எல்லாம் ஊடகர்களின் கைங்கர்யம். சிறிதுநேரம் பொறுத்தவர், அனைவரையும் தலைமைச் செயலகத்தில் சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.
தலைமைச் செயலகத்தில் பூனைப்படையினரின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இதே செய்தியாளர்கள் சந்தித்தனர், பதினைந்து அடி இடைவெளியில்!
அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்ததே நான்கைந்து முறைதான்.
ஊடகர்களுக்கு குறைந்தபட்ச சுய கட்டுப்பாடோ, ஒழுங்கோ இல்லை என்றுமே இருந்ததில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. 20 ஆண்டுகளுக்கும் மேல் முக்கிய பிரஸ் மீட்களைக் கவனித்த சக ஊடகர் ஒவ்வொருவருக்கும் இது தெரிந்திருக்கும். இன்று, முதல்வர் பன்னீர் செல்வத்தின் பிரஸ் மீட்டில் இன்னொரு மடங்கு மோசம்!

பேச வேண்டியவர் பன்னீர். அமைதியாக நின்று கேட்க வேண்டியவர்கள், பதிவு செய்ய வேண்டியவர்கள் ஊடகர்கள். ஆனால் இன்றோ பன்னீர் அமைதியாக, லேசான சிரிப்புடன் நிற்க, ஊடகர்கள் பேசிக் கொண்... இல்லை இல்லை கத்திக் கொண்டிருந்தனர். எப்போதான் ஒரு சுயகட்டுப்பாட்டுக்கு வரப்போறாங்களோ என கமெண்டுகள் பறக்கின்றன சமூக வலைத் தளங்களில்!












Click it and Unblock the Notifications