தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை கட்சியை வளர்க்கவே விருப்பம் - குஷ்பு பேட்டி
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை எனவும் கட்சியை வளர்க்கவே தாம் விரும்புவதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தற்போது முடிவடைந்துள்ளது. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்தார்.
மேலும், இந்த தேர்தலில் கோஷ்டிகளுக்கு சீட் இல்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார். தகுதியானவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படும் எனவும் ராகுல் கூறியுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு, தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல், தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. கட்சியை வளர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வாசன் குறித்து இளங்கோவன் கூறிய கருத்திற்கு பதில் கூற குஷ்பு மறுத்துவிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் இடையோ கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்டு வந்த நிலையில் குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.