முதல்வர் ஜெயலலிதா நன்றாகத்தான் இருக்கிறார்.. ஆதாரம் என்ன தெரியுமா?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா, சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிடும்படி, திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள்விடுக்கும் அளவுக்கு வதந்திகள் றெக்கை முளைத்து சுற்றித் திரிகின்றன.
அதேநேரம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், நேற்றுடன் சேர்த்து 5 முறை ஜெயலலிதா உடல் நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக அளித்தது. அனைத்திலுமே ஜெயலலிதா நலமடைந்து வருவதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக தகவல் இல்லை
முந்தைய அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருந்ததை அப்பல்லோ தெரிவித்திருந்தது. நேற்றைய அறிக்கையில், பழைய சிகிச்சையே தொடருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிக்கையில் ஒரு விஷயத்தை கவனித்து பார்த்தால் புரியும். அறிக்கையில், சிகிச்சை பற்றிய அதிகப்படியான தகவல்களை தெரிவிப்பதை மருத்துவமனை தவிர்த்து வருகிறது.
[Read more: அப்பல்லோ மருத்துவமனையும், அந்த ஐந்து அறிக்கைகளும்!]
மிகுந்த மரியாதை
அதேநேரம், Honorable Chief Minister என்ற வார்த்தையை வரிக்கு வரி பயன்படுத்துகிறது மருத்துவமனை நிர்வாகம். அறிக்கையில் பாதி வரிகள் Honorable Chief Minister என்பதாகத்தான் உள்ளது. ஜெயலலிதாவுக்கு கட்சியினரும், அதிகாரிகளும், அமைச்சர்களும் மிகுந்த மரியாதை கொடுத்து பேசுவது வழக்கம். எதிரில் கூட பவ்யமாகத்தான் நிற்பார்கள். மாண்புமிகு, புரட்சித் தலைவி, இதய தெய்வம் அம்மா என்றுதான் சட்டசபையில் கூட சக கட்சியினர் பேச தொடங்குவார்கள்.
இந்த டிவிட்டை பாருங்க
இந்நிலையில்தான், அப்பல்லோ ஆஸ்பத்திரி தனது அறிக்கையில், இத்தனை முறை Honorable Chief Minister என்ற வார்த்தையை போட்டு மிகவும் பவ்யம் காட்டுவதை பார்த்தால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறுகிறது ஒரு டிவிட். ஜெயலலிதா இந்த அறிக்கைகளை படிக்கிறார் அல்லது படிப்பார் என்ற ஒரு பதற்றம் அறிக்கையை தயாரிப்போரிடம் இருப்பதால்தான் இத்தனை மரியாதை என்று கூறுகிறது இந்த டிவிட்.
இது வழக்கம்தானாம்
ஆனால் முதல்வர் என்ற பதவிக்காக யாராக இருந்தாலும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி அறிக்கை வெளியிடுவது மருத்துவமனை நிர்வாகங்களின் பணி என்று கூறப்படுகிறது.