சென்னையில் துணிகரம்.. பட்டப்பகலில் வங்கி மேலாளர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை !
சென்னையில் பட்டப்பகலில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வங்கி மேலாளர் வீடு புகுந்து 45 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முடிச்சூர், அமுதம் நகர் 3வது பிரதான் சாலையில் வசிப்பவர் சின்ன பையன்(57), சென்னை சென்ட்ரலில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மலர்விழி, மணிமங்கலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல தம்பதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மாலை பள்ளி முடிந்து மலர்விழி வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு, முன்பக்க கதவு ஆகியவை உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே சென்று பார்த்ததில் மூன்று பீரோக்கள், மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறி்தது குறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் படிக்கும் மகனின் செலவுக்கு பணம் அனுப்ப அடகு வைக்க இருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என சின்ன பையன் வேதனை தெரிவித்தார்.