திருக்கோவிலூர் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரூபாய் 5 லட்சம் திருடு போன சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ். இவருக்கு திருக்கோவிலூரில் போலீஸ் நிலையம் அருகே 2 வீடுகள் உள்ளன.
இதில் ஒரு வீட்டில் சிவராஜும், மற்றொரு வீட்டில் அவரது அம்மா லட்சுமி அம்மாளும் வசித்து வருகிறார்கள்.
பூட்டிய வீடு:
சிவராஜூக்கு சென்னையிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு லட்சுமி அம்மாள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்றுவிட்டார். லட்சுமி அம்மாள் இருந்த வீடு பூட்டி கிடந்தது.
5 லட்சம் கொள்ளை:
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கே வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 கிலோ வெள்ளி, மற்றும் பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றனர். இவைகளின் மதிப்பு ரூபாய் 5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பூட்டை உடைத்து கொள்ளை:
சிவராஜ் வீட்டில் கொள்ளையடித்த மர்ம மனிதர்கள் அதே பகுதியில் உள்ள பாரதி என்பவரின் மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 60 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
அரிசிக் கடையிலும் கொள்ளை:
மேலும் தெற்கு வீதியில் உள்ள செந்தில் என்பவரின் அரிசி கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்து 7,500 ரூபாயை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
போலீஸார் கண்காணிப்பு:
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மோப்ப நோய் சோதனை:
துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசுவரன் தலைமையில், கைரேகை நிபுனர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலை நோக்கி ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
3 இடங்களில் கொள்ளை:
ஒரே நாளில் 3 இடங்களில் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்திருப்பதால் திருக்கோவிலூரில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.