ஜெ. மறைவால் புறக்கணிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி.. 4 நாட்களாக குடிநீர் சப்ளையில்லை.. மக்கள் மறியல்
ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், அவரது சட்டசபை தொகுதியான ஆர்.கே.நகர், ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபை தொகுதியான சென்னை, ஆர்.கே.நகர் அரசால் கைவிடப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.
வர்தா புயல் கடந்து சென்றபிறகு 4 நாட்களாகியும், ஆர்.கே.நகரில் இன்னமும் முழுமையாக மின்சார சப்ளை இல்லை. குடிநீர் வினியோகமும் கிடையாது.

வெறுத்துப்போன மக்கள் சாலை மறியல் நடத்தியனர். பெண்கள் காலி குடங்களோடு சாலையில் அமர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திரா என்ற பெண்மணி இதுகுறித்து கூறுகையில், ஜெயலலிதாவின் தொகுதியாக ஆர்.கே.நகர் மாறிய பிறகு பொதுப் பிரச்சினைக்காக மக்கள் நடத்தும் முதலாவது போராட்டம் இதுதான். முதல்வராக இருந்தவர் தொகுதியிலேயே 4 நாட்களாக தண்ணீர் சப்ளை இல்லை. குடிக்கவோ, கழிவறைக்கு பயன்படுத்தவோ தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கிறார்கள் என்றார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆர்.கே.நகர் அவரது செல்லப் பிள்ளையாக கருதப்பட்டது. கடந்த வருடம் வெள்ள சேதம் ஏற்பட்டபோது கூட வேறு எந்த பகுதிக்கும் செல்லாத ஜெயலலிதா, ஆர்.கே.நகர் மட்டுமே சென்று மக்களை பார்வையிட்டார்.
ஜெயலலிதா மறைந்து ஒரு வாரம்தான் முடிந்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி அனாதையாக விடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் தொகுதியில் வசிக்கும் மக்கள்.












Click it and Unblock the Notifications