சுடுகாட்டில் படுக்க பயமில்லை.. சுதந்திர நாட்டில் தான் பயமாக இருக்கிறது.. சகாயம் ஐஏஎஸ்
சென்னை: எனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது என்று சகாயம் ஐ.ஏ.எஸ்., கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சகாயம் ஐஏஎஸ் பேசியதாவது: லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் எனத் திரும்பத் திரும்ப சொல்வதால் தான் 26 ஆண்டுகளில் 24 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அதற்காக எனது கொள்கையில் நான் ஒருபோதும் தளர்ந்தது இல்லை என்றார்.
மேலும் நான் மதுரை ஆட்சியராக பணிபுரிந்த போது எனக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் தர இருப்பதாக தகவல் வந்தது. தற்போது உள்ள சூழலில் எனக்கு சுடுகாட்டில் படுக்க கூட பயமில்லை ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது. இவ்வாறு சகாயம் கூறினார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு விசாரணை நடத்திய போது, நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. நரபலி கொடுத்த சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுக்க போலீசார் ஒத்துழைக்கவில்லை. இரவு நேரம் எனக் கூறி போலீசார் அலைக்கழித்தனர்.
எனினும் அசராத சகாயம் குழுவினர் இரவு எத்தனை மணி நேரமானலும், புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து உடலை ஆய்வு செய்த பிறகே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.