வருமான வரித்துறை ரெய்டுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பில்லை.. தமிழிசை
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.கவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனைக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகளுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை இயல்பான ஒன்று. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பாமர மக்களின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற சென்றாலும் தவறு செய்தவர்கள் தப்பமுடியாது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் இருந்து அண்மையில் கணக்கில் வராத பணம் மற்றும் தங்க நகைகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராம மோகன் ராவ் போரூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.