இரு அணி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.. முதல்வர் ஊரை ஏமாற்றுகிறார்..சசி ஆதரவு புகழேந்தி ஆவேசம்!
அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என சசிகலாவின் அதிமுக அம்மா அணியின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என சசிகலாவின் அதிமுக அம்மா அணியின் புகழேந்தி தெரிவித்துள்ளார். இரண்டு அணியும் இணையும்னு சொல்வது இப்போது ஜோக் ஆகிவிட்டது என்றும் அவர் புகழேந்தி கூறினார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரை ஏமாற்றுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரனை விடுவிக்கக்கோரியும் தினகரன் கைதுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் அதிமுக அம்மா அணியின் தினகரன் ஆதரவாளர்கள் ஊர் ஊராக சென்று கண்டன கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத்தும், அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியும் முன்னெடுத்து செல்கின்றனர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்றக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தும், புகழேந்தியும் கலந்து கொண்டனர்.

கீரியும் பாம்பும் சண்டை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி இரண்டு அணிகளும் இணையும் என சொல்வது இப்போது ஜோக் ஆகிவிட்டது என்றார். கீரியும் பாம்பும் ரோட்டில் சண்டை போடப் போகிறது என சொல்லும் கதையாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஊரை ஏமாத்துகிறார்கள்
எங்கள் கட்சியில் முதல்வரோ, வனத்துறை அமைச்சரோ, இணையும் என்று கூறினால், ஊரை ஏமாத்துகிறார்கள் என அர்த்தம் என்றும் புகழேந்தி கூறினார். மக்களோடு விளையாட வேண்டாம் என கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

அயோக்கியத்தனமான வேலை
இரு அணிகளும் இணையும் என கட்சியினர் கூறுவது ஒரு அயோக்கியத்தனமான வேலை என்றும் புகழேந்தி சாடினார். இரு அணிகளும் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் புகழேந்தி அழுத்தம் திருத்தமாக கூறினார்.

கட்சிக்குள் சலசலப்பு
அதிமுகவின் இரு அணிகளும் நிச்சயம் இணையும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் புகழேந்தி இவ்வாறு பேசியிருப்பது அதிமுக அம்மா அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications