திருடப்போன டாஸ்மாக்கில் குடித்து விட்டு மட்டையான திருடன்... தட்டி எழுப்பி 'தூக்கிய' போலீஸ்
சிவகங்கை: சிவகங்கை அருகே டாஸ்மாக் கடையில் திருடச் சென்ற திருடன், நன்றாக குடித்து விட்டு அங்கேயே உறங்கியுள்ளார். மறுநாள் காலை அவரைத் தட்டி எழுப்பி போலீசார் கைது செய்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூரில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று உள்ளது. வழக்கம் போல, நேற்று முன்தினம் இந்தக் கடையை மூடிவிட்டு விற்பனையாளர் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை அவர் வழக்கம் போல கடையைத் திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது தொடர்பாக அவர் மதகுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் கடைக்குள் சென்று பார்த்த போது, அங்கு 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடப் பட்டிருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக்கின் மாடிப் பகுதிக்கு சென்று பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அங்கே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைத் தட்டி எழுப்பிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவரது பெயர் சுதந்திரமணி(30) என்றும், தனது கூட்டாளிகளுடன் நள்ளிரவில் கடை பூட்டை உடைத்து திருட வந்ததும் தெரிய வந்தது.
மேலும், மது பாட்டில்களைக் கண்ட ஆசையில் அதிகம் குடித்து விட்டதாவும், பின்னர் போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சுதந்திரமணியைக் கைது செய்த போலீசார், அவருடன் டாஸ்மாக்கில் திருட வந்த மற்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications